-->

Sunday, December 21, 2014

உலகை மாற்றிய மாமனிதர்


உலகில் பரவலாக பேசப்படுகின்ற பல பிரபலமானவர்களைப் பற்றி பலரும் அறிந்திருக்கின்றனர். அந்த பிரபலங்கள் என்ன செய்தார்கள் என்றே  தெரியாமலும் கூட அதிகமானவர்கள் இந்த பிரபலங்களைப் பற்றி பேசுவதால் பலரும் இவர்களை அறிந்து வைத்திருக்கின்றனர். இன்னும் அவர்களைப் பற்றி அறிய ஆவலாயும் இருக்கின்றார்கள்.

கூடுதலான பிரபலங்கள் ஆன்மீகத் தலைவராய் இருந்திருப்பார்கள். இல்லையெனில் அரசியல் தலைவராய் இருந்திருப்பார்கள்.ஆனால் சமகாலத்தில் ஒரே மனிதனால் ஆன்மீகத் தலைவராகவும்  அரசியல் தலைவராகவும் இருப்பதென்பது மிகக் கடினமான ஒன்றாகும். (இன்றைய கால மக்களும் ஆன்மீகம் ,  அரசியல் என்ற இரு வேறுபட்ட நிலைகளின் நடைமுறை சிக்கலை நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.) 

 ஆனால் இந்த உலகை மாற்றிய மாமனிதர் மிக அழகாகவும் ,  தெளிவாகவும் ,  பலருக்கு முன்மாதிரியாகவும் தன்னுடைய ஆன்மீக ,  அரசியல் வாழ்வினை வாழ்ந்து காட்டினார்கள். சரித்திர ஆசிரியர்கள் பலர் இவரை பற்றி மிக ஆச்சிரியமான விடயங்களை எழுதியுள்ளார்கள்.

மேற்கத்திய உலகம் இவரைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்துள்ளதுடன் இவரது போதனைகளை ஏற்றும் கொண்டுள்ளது. இவரது அரசியல் நெறிமுறைத்தான் முழு உலகிற்கும் சரியானது என மேற்குலகமே வியப்புற்று நிற்கின்றது.

   ஆனால் நாமோ இவரைப் பற்றி இன்னும் தெரியாதவர்களாய் இருக்கின்றோம். அவர் அதிசயமானவர்  பூமியில் சமாதானத்தை நிலை நாட்டினார்  அவர் எதிரிகளை சகோதரர்களாக்கினார். அவர் குல ,  நிற வேறுபாட்டை ஒழித்தார் ஏழைகளுக்கும் ,  அநாதைகளுக்கும் அன்பு காட்டினார் மூடர்களை நல்ல அறிஞர்களாய் மாற்றினார்.

  யேசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பேதனைகளை மறந்து மக்கள் வழிதவறிப் போகும் காலத்தில் வணங்கப்பட தகுதியான இறைவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதனை மீண்டும் ஞாபகமூட்டினார். இந்த ஏக இறைக் கோட்பாட்டினை நிலை நாட்டினார்.

 இவர் நாமம் முஹம்மத் (அவரின் மீது சாந்தி உண்டாகட்டும்) ஆகும். இவர் தாயாரின் கருவறையில் இருக்கும் போதே தந்தையை இழந்துவிட்டார். பிறந்து ஆறு வயதில் அருமை தாயையும் இழந்து அநாதையானார். தனது சிறு தந்தையின் வழியில் வளர்ந்து வாலிபனார்.

 இவர் பிறந்து வளர்ந்தது அறேபியாவின் நாகரீகமில்லாத ஒரு சமூகத்திலாகும். சிறு சண்டைகளுக்கு கூட தமக்குள் கொலை செய்து கொள்ளும் பழக்கத்தை இவர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். அத்தனை பயங்கர பாவச் செயல்களையும் இந்த மக்கள் சர்வசாதாரணமாகவே செய்து வந்தனர். அவர்களிடத்தில் மதுப்பாவனை ஒரு கௌரவச் செயலாக மதிக்கப்பட்டிருந்தது. முடமைக்கே மகுடம் சூட்டி அவர்கள் மதியிழந்து மகிழ்ந்து வந்தனர். பெண் குழந்தை பிறந்தால் அது தன் குழந்தை என்று கூட பாராமல் மண்னுக்கே இறையாக்கினர். இதை பார்த்து உலக சரித்திரமே வியந்து போனது. இப்படியும் மோசமானவர்களா? இவர்கள் என்று.

   மிக மோசமான மக்கள் மத்தியிலும் இவரோ மிக நல்லவர் என்றே அன்று பெயர் பெற்றிருந்தார். முஹம்மத் நபியவர்கள் அறேபியர்களின் உயர் குலமான குறைஷி வம்சத்தின் பனூ ஹாஷிம் குலத்தில் பிறந்தார். அக்கால மக்கள் இவரை “அஸ்ஸாதிக் (உண்மையாளர்); அல் அமீன் (நம்பிக்கையாளர்)”  என்ற வார்த்தைகளினால் சிறப்பு நாமம் கொடுத்து அழைத்தனர்.

அன்றைய அறேபிய மக்கள் புனித இஸ்லாத்தை இந்த முஹம்மத் நபியின் உருவத்தில் தான் கண்டார்கள். இந்த இறைதூதரின் நேரிய வாழ்க்கை முறைமையினால் கவரப்பட்டவர்கள் புனித இஸ்லாத்தை தமது வாழ்க்கையாகவே ஏற்றுக் கொண்டு தம்மையே மாற்றிக் கொண்டார்கள்.

  இன்றும் கூட இது பொறுத்தமாகவே தான் இருக்கின்றது. ஒருவர் இஸ்லாம் எனும் வாழும் கலையை தெரிந்துக் கொள்ள விரும்பினால் அவர் முதலாவதாக இறைவனின் தூதர் முஹம்மது நபியவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் அவசியமாய் இருக்கின்றது. மனித குலத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முஹம்மது நபியவர்கள் தனது இறைக் கொள்கைக்கு ஒரு போதும் தன் பெயரை சூட்டிக் கொள்ளவில்லை. அக்கொள்கை “இஸ்லாம்”  எனும் அறபிச் சொல்லாகவே இருக்கின்றது. அதன் அர்த்தம் சமாதானம் , கீழ்படிதல் , சரணடைதல் ஆகும். இவையாவும் யாருக்கு…? இந்த சரணடைதலும் ,  கீழ்படிதலும் , கட்டுப்படுதலும் பிரபஞ்ச படைப்பாளனாகிய ஒன்றாய் ஒருவனாய் இருக்கின்ற அல்லாஹ் ஒருவனுக்கே.

   சுமார் பதினான்கு நூற்றாண்டுகளாகியும் முஹம்மது நபிகள் நிலை நாட்டிய “ஒருவனே இறைவன் அவனே அல்லாஹ”; என்ற போதனை இன்றைக்கும் கடுகளவும் கூட்டாமலும்  குறைக்கப்படாமலும் இருப்பது ஆச்சிரியம் தான். சுமார் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னும் இந்த திருத்தூதரை அப்படியே பின்பற்றுகின்றனர். 

   இன்று சவூதி அறேபியா என எல்லோராலும் அறியப்படுகின்ற நாட்டில் மக்கா எனும் ஊரில் தான் முஹம்மது நபிகள் பிறந்தார்கள். கி.பி 571 ஆம் ஆண்டளவில் முஹம்மது நபியவர்கள் பிறக்கும் பொழுது சாதி , குல வேற்றுமை அங்கு கொடூரமாக பரவியிருந்தது.   குல வேற்றுமையினால் பலர் பகமையோடு வாழ்ந்து வந்தனர். பல யுத்தங்களும் பல காலம் அங்கு தொடரச்சியாக நடந்தன.குல வெறியே கொலை வெறியர்களை சமூகத்தின் உயர் பிரஜைகளாக மகுடம் சூட்டி மதிப்பளித்தது. இந்த சாதி ,  குல வேற்றுமையை முஹம்மது நபிகள் அடியோடு அழித்துவிட்டார்கள். இன்றும் அறபு நாடுகளிலும் ,  இஸ்லாமிய மார்க்கத்திலும் இந்த சாதி ,  குல வேறுபாடு கிடையவே கிடையாது. உயர்வு ,  தாழ்வு கிடையவே கிடையாது.

   முஹம்மது நபியவர்கள் தனது இருபதைந்தாம் வயதில் தன்னை விட வயதில் முதியவராகிய கதீஜா என்ற பெண்மணியை மணந்தார்கள். அப்போது அப்பெண்னுக்கு நாற்பது வயதாக இருந்தது. இந்த கதீஜா அம்மையார் இவரை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் இவரது நேர்மையும்  உண்மைத் தன்மையும் தான். கதீஜா அம்மையார் ஒரு செல்வ சீமாட்டியாக இருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

   முஹம்மது நபிகள் தான் சமூகத்தார் மத்தியில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்ததுடன் உண்மையாளர் ,  நேர்மையாளர் , நம்பிக்கை;ககுரியவர் என்ற நல்ல பெயருடன் வாழ்ந்து வந்தார்கள்.

   அவரது நாற்பதாம் வயதில் அவர் (மக்கா) பாரான் பாலைவனத்தில் ஹிறா எனும் மலைக் குகையில் தன்னந் தனிமையில் தொடராக இறை சிந்தனையிலும்  இறைத் தேடலிலும்  தியானத்திலும் இருந்த வேலையில் ஜிப்ரயேல் எனும் பிரதான வானவர் மூலம் அவருக்கு இறை வசனங்கள் இறங்கியது. முஹம்மது நபியவர்கள் ஞானமிக்கவரானார். முஹம்மது நபியவர்கள் இறைவனின் இறுதி தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் பெயற்றரவாளன்.

   நாற்பது வயதுவரை மிக நல்லவராகவே வாழ்ந்த முஹம்மது நபியவர்கள் அது முதல் தன்னை இறைவனின் இறுதி தூதர் என்று பிரகடனம் செய்கிறார். அவர் பாவத்தை குறித்தும் ,  நீதியை குறித்தும்  ,  நியாய தீர்ப்;பு நாளை குறித்தும் மக்களை கண்டித்து உணர்த்தினார். சகல சத்தியங்களுக்குள்ளும் மக்களை வழிநடாத்தினார்.

   இவருக்கு அருளப்பெற்ற இறை செய்தியின் தாக்கம் பலரை நேர்வழிக்கு அழைத்துச் சென்றது. பலரை நல்லவர்களாகவும் ,  உண்மையாளர்களாகவும் மாற்றியது. பலருக்கு பிறப்பின் உண்மையை உணர்த்தியது. அத்தோடு முழு உலகிற்கும் பேரொளியாகவும் ,  அருளாகவும் அமைந்தது. அந்த இறை செய்தி தான் “வணங்கி வழிபட தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் கிடையாது. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் இறுதி தூதரும் ஆவார்” என்பதாகும்.

   இந்த இறைச்செய்தி முஹம்மது நபியவர்களுக்கு முன்பும் அருளப்பட்டிருந்தது. இச்செய்தியை சொன்ன முன்னைய தீர்க்கதரிசிகளான இப்றாஹீம் ,  தாவூத் ,  சுலைமான் ,  மூஸா , ஹாரூன் ,  ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) போன்றோர் மிக தெளிவான போதனைகளை செய்திருந்தும் மக்களோ காலத்துக்கு காலம் போதனைகளை மறந்து வழி தவறிப் போனார்கள். தூதர்களையே கடவுளாக்கி வழிபட்டு வழி தவறிப் போய் வேறு விதமாய் புது மார்க்கம் கண்டார்கள்.

   உண்மையான உறுதியான இறைச் செய்தியை முஹம்மது நபியவர்கள் மீண்டும் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறார்கள். இது புதுக் கொள்கை அல்ல. இஸ்லாம் என்பது முன்னைய தீர்க்கதரிசிகளின் இறைக் கொள்கைதான்.

   அந்நாட்களின் அறேபிய மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ஒரு நாளைக்கு ஒரு சிலை என வருடத்தற்கு 360 சிலைகளை வணங்கினார்கள். அல்லாஹ் ஒருவனே வணங்கப்பட வேண்டிய கடவுள் எனும் இறைச் செய்தியின் பின் இச்சிலை கொள்கையை விட்டும் அந்த மக்களை மீட்பதற்கு முஹம்மது நபியவர்கள் பெரும் துயரங்களையும் ,  துன்பங்களையும் அனுபவித்தார்கள். இவரை நல்லவர் என்று சொன்ன அதே சமூகம் மிக மோசமானவர் என்று சொல்வதற்கும் தயங்கவில்லை.

   வட்டி வியாபாரம் ,  சூதாட்டம் , விபச்சாரம் , கொலை , கொள்ளை,  பொய் , ஏமாற்று போன்ற மாபெரும் பாவச் செயல்களில் இருந்து அம்மக்களை மீட்டெடுத்தார்கள். இவர் இதுவரை மீட்டெடுத்த நல்லவர்களுடன் தனது போதனைகளை தொடர்ந்து மக்கா நகரில் செய்ய முடியாமற் போனது. கைதர் (கேதர்) வம்சத்தார் இந்த முஹம்மது நபியை பிறந்த மன்னை விட்டு துரத்தினர். எனவே தன் மக்களோடு மதீனா (தேமா) நகரை நோக்கி பயணமானார்கள். மதீனா (தேமா) இவர்களை வரவேற்றது. இவர்களுக்கு அடைக்கலம் கிடைத்தது. (அப்பமும் தண்ணீரும் கிடைத்தது)

   மக்காவில் ஆன்மீகத் தலைவராக மட்டுமே இருந்த முஹம்மது நபியவர்கள் (தேமா) மதீனாவின் பக்கம் குடிபெயர்ந்த பின் அரசியல் தலைவராகவும் , ஆட்சித் தலைவராகவும் மாறுகின்றார்கள். இதைத் தொடர்ந்து பல யூதர்களும் ,  கிறிஸ்தவர்களும் இஸ்லாத்திற்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். வணங்கி வழிபட தகுதியான இறைவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என உறுதிக் கொண்டனர்.

   முஹம்மது நபியவர்கள் ஒரு ஆட்சித் தலைவராக இருந்தும் கூட மிகமிக எளிமையான ஒரு வாழ்வையே வாழ்ந்து வந்தார்கள். எவ்விதமான பகட்டுகளும் இல்லாமல் பக்கத்தில் எந்த பாதுகாவலர்களும் இல்லாமல் அரண்மனை ,  சிம்மாசனம் எதுவுமே இல்லாமல் சராசரி ஒரு சாதாரண மனிதனைப் போலவே வாழ்ந்தார்கள். உலகில் எந்த தலைவரும் இவ்வாறு இருந்திருப்பாரா..? 

   அதனால்தான் அன்று அம்மக்கள் தன் மனைவி , பிள்ளைகள் , தாய் ,  தந்தை , உற்றார் உறவினர்கள் ,  சொத்து சுகம் அனைத்தையும் விட இம்மகத்தான மனிதரை உயிராய் நேசித்தார்கள். இன்றும் அது போலவே இவரை நேசிக்கக் கூடிய பல கோடிப் பேர் காணப்படுகின்றனர்.

   இவரது உணவு விடயத்தை கவணித்து பார்த்தவர்கள் யாரும் கண் கலங்காமல் இருக்கமாட்டார்கள். அந்தளவிற்கு ஒரு சாதாரண மனிதனை விட மிக ஏழ்மையாகவே உணவு உட்கொண்டார்கள். சில வேலை உணவின்றி மூன்று நாட்கள் தொடர் பட்டினியால் வாடினார்கள். இவர் வயிறார உணவு உட்கொண்டது மிக அபூர்வமாகவே இருந்தது. ஒரு ஆட்சித் தலைவர் இவ்வாறு ஏழ்மையாக வாழ்ந்ததை எங்கே நாம் காண முடியும..?!. ஒருவரை கூட காட்ட முடியாது. தன் கையில் ஆட்சியின் முழு அதிகாரமும் இருந்தால் இவ்வாறு யாரால் வாழ முடியும்..!? ஆனால் அம்மாமனிதரால் முடிந்தது. காரணம் உலகாலும் உண்மை இறைவனின் இறுதித் தூதராய் இவர்கள் இருந்தார்கள். அந்த இறைவன் அவரை வழி நடாத்தினான். அல்லாஹ்வின் வழிகாட்டல் இவரை உறுதி பெறச் செய்தது. 

   முஹம்மது நபி தான் இறைவனின் இறுதித் தூதர் என பல மாற்றுமத அறிஞர்களும் இன்று ஏற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சிலர் மட்டும் பிழையாக சிந்திப்பதையும் நாம் காணக் கூடியதாய் இருக்கின்றது. அவர்கள் ஒரு விடயத்தை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கே உண்மை புரியும்.

   தன் சமூகத்தில் நாற்பது வயது வரை எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் நம்பிக்கையாளர் ,  உண்மையாளர் என்று பெயர் எடுத்தவர். திடீரென தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றோ இறைவனின் தூதர் என்றோ கூறி தன் பெயரை கெடுத்து கொள்ள ஒரு போதும் விரும்ப மாட்டார். பெரும்பான்மை சமூகமே ஒருவரை மிக நல்லவர் என நம்பியிருக்கும் போது அம்மனிதர் தன் அந்தஸ்தை , புகழை இன்னும் உயர்த்திக் கொள்ள, அதிகரித்துக் கொள்ள பார்ப்பாரேயல்லாமல் புதுமையான விடயங்களை முயற்சிக்கமாட்டான் என்பது நம் அனைவருக்கும் மிக தெளிவாக புரிகின்றது.

   ஆனால் முஹம்மது நபியவர்களோ உண்மையை சொல்ல ஒரு போதும் தயங்கியதில்லை. சத்தியம் இது தான் என தெளிவாக அவர் அறிந்து கொண்டவுடன் அதை மக்கள் மத்தியில் போதிக்க ஆரம்பித்தார். முஹம்மது நபியவர்கள் ஒரு புதிய மார்க்கத்தை அறிமுகப்படுத்த வந்திருந்தால் அவர் இயேசுவையும் (ஈஸா) மோஸசையும் (மூஸா) பற்றி அன்றைய மக்களிடம் உயர்வாகவும் கன்னியமாகவும் போதித்திருக்கத் தேவையில்லை. முன்னைய நபிமார்களான தூதர்களான இவர்களை நம்புவது மிக அவசியம் என்றும் இவர்களை நம்பிக்கை கொள்ளாமல் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது என்றும் இவர் தெளிவாக போதித்தார். இதனை இஸ்லாத்தின் அடிப்படையாகவும் வழியுறுத்தினார்.

   பிழையாக சிந்திப்போர் சற்று சிந்திக்க வேண்டும். பொய்யான ஒரு மனிதன் தன்னை இறைவனின் தீர்க்கதரிசி என மிக நீண்ட காலம் வாதிட முடியாது. வாழ்ந்து காட்டவும் முடியாது. அவர் காட்டிய அந்த போதனை வழியும் நீண்டகாலம் நில்லாது. அன்றைய காலத்திலேயே பலர் இந்த மகத்தான மனிதர் மேல் பல அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் கட்டவிழ்த்து விட்டார்கள். ஆனால் அவரோ நீண்ட பொறுமையுடன் இருந்தார்கள். காலப்போக்கில் இவருக்கு அநீதி இழைத்தவர்களே இவரது உண்மைத் தன்மையை கண்டு இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். இன்றும் அதையே நாம் காண்கின்றோம். 

   ஒருவர் தன்னை ஒரு இறைத் தூதர் என பொய்யாக பெறுமைப்படுத்தியிருந்தால் அவரது இறைப் போதனையில் உண்மையிராது. அவர் நடையில் நீதம் இராது. அவர் வாழ்வில் முன்மாதிரி இராது. ஆனால் இந்த மகத்தான மனிதர் முஹம்மது நபியவர்கள் (அவரின் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டும்) அவர்களோ தனது போதனைகளை ,  தனது வழிகாட்டலினை கோடான கோடி மக்கள் இன்றைக்கும் கைக்கொள்ளக் கூடிய வகையில் அழகாகவும் ,  இலகுவாகவும் , எளிமையாகவும் காட்டித் தந்திருக்கின்றார்கள். இஸ்லாத்தின் நம்பகத் தன்மையில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. 

   இவர் இறைவனின் உண்மையான தூதர் என்பதற்கு இன்னும் பல சான்றுகளும் இருக்கின்றன. இவரது உயர்ந்த குறிக்கோளுடனான போதனைகளுக்கு முன்னால் அன்றைய அறபி கவிஞர்கள் எல்லாம் தோற்றுப் போனார்கள். இவரது இறை போதனைகளுக்கு முன்னால் பல நாவன்மையுள்ளவர்களும் தோற்றுப் போனார்கள். முஹம்மது நபியவர்களின் வசீகர போதனை அனைவரையும் செவியுறச் செய்தது. இதனால் அறபுலகமே வியந்தது. காரணம் அந்த அளவிற்கு அவர்களின் சொல்வன்மை நிகரற்றதாய் இருந்தது. அவரது சொற்பொழிவுக்கு நிகராக ஒரு சொற்பொழிவையேனும் உருவாக்க ஒருவாராலும் முடியாமல் போனது. இன்றும் இது பெறும் சவாலாகவே உள்ளது.

   சந்தேகம் கொள்வோர் பலர் தெளிவு பெற்றிருப்பார்கள் என இப்போது விளங்குகின்றது. இதன் பிறகு ஒருவருக்கு சத்தியம் தேவையெனின் அவர் முஹம்மது நபியவர்களைத் தான் பின்பற்ற வேண்டும். அவர் வழி சத்தியமாய் இருக்கின்றது. அவர் சத்தியத்தையே சரியான வழியாக போதித்தார்.

   முஹம்மது நபிகள் (அவரின் மீது சாந்தி உண்டாகட்டும்) ஒரு சாதாரண மனிதரே. ஆனால் ஓர் உன்னத மகத்தான குறிக்கோளுக்காக உழைத்த மகத்தான மனிதர். அவரது போதனைகளில் பிரதான போதனை ஒரே ஒரு இறைவனை வணங்குமாறு முழு மனித குழைத்தையும் அழைப்பதும் , அந்த அல்லாஹ்வின் கட்டளைப்படி நேர்மையான ,  தூய்மையான , உயர்ந்த ஒழுக்க பண்புகள் அடங்கிய சமூகத்தை தனது முன்மாதிரி வாழ்வின் மூலம் உருவாக்குவதுமே ஆகும்.

   இவரது போதனைகள் வெறும் வாய் வார்த்தைகளாய் மட்டும் இருக்கவில்லை. போதனைகள் யாவும் செயலுருவில் மலர்ந்தது. செயற்படுத்த கூடிய பல பேர் அவர் கண் முன்னே செயலுருவாய் திகழ்ந்தார்கள். அவரது போதனைகள் இன்றைக்கும் பல்லாயிரக் கணக்கான மாந்தர் வழமாய் வாழும் வாழ்க்கை நெறியாய் இருக்கின்றது.

   அன்பின் நண்பர்களே! இதுவரை முஹம்மது நபிகள் (அவரின் மீது சாந்தி உண்டாகட்டும்) பற்றி பல விடயங்களை நாம் பார்த்தோம். புகழையும் ,  மரியாதையையும் இயல்பிலேயே விரும்பாத அதிசய மனிதராய் அவர் இருக்கின்றார். இங்கு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் முக்கியமான ஒரு விடயமும் இருக்கின்றது. நிச்சயமாக அனைவரும் சற்று நிதானத்தோடு கவணித்து பார்க்க வேண்டும்.

   முஹம்மது நபியவர்கள் பலரால் போற்றப்பட்டும் சரித்திரம் அவரை உயர்வாய் பேசியும் , அறிஞர்கள் பலர் அவர் புகழ் பாடியும் ,  அன்றைய அறபுலகமே வியந்து பாராட்டியும் ,  பல அற்புதங்களை அவர் செய்திருந்தும் , உலகை மாற்றிய மாமனிதராய் அவர் இருந்தும் ஒரு போதும் அவர் தன்னை கடவுளின் சாயல் என்றோ , அவதாரம் என்றோ , இறைமகன் என்றோ , இறை அம்சத்தில் ஒன்றென்றோ கூறவே இல்லை. மாறாக அவர் சொன்னது “நான் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் இறுதி தூதரும் , அல்லாஹ்வின் அடிமையும் ஆவேன்” என்பதேயாகும்.

   நண்பர்களே! இஸ்லாம் ஓர் உன்னத மார்க்கம் ,  கலப்படம் இல்லாத தூய மார்க்கம் என்பதற்கு இதையன்றி வேறென்ன ஆதாரம் தேவை. உலக மாந்தருக்கு நற்போதனை செய்த எத்தனையோ நல்லவர்களையெல்லாம் இன்று கடவுள் என மக்கள் நினைத்து பூத்தூவி ,  தீப ஆராதனை செய்து.  அவர்களுக்கு பலவகை உருவச் சிலைகளை செய்து வணங்கி வழிபடுவதையெல்லாம் நாம் இன்றும் கண்கூடாக கண்டுக் கொண்டுத்தானே இருக்கின்றோம். இவை தனிமதின வழிபாடுகளாக ஆரம்பித்து பின்னர் அதனால் ஒரு மக்கள் கூட்டமே வழிகெட்டு பிழையான வழியில் செல்லக் கூடிய மதங்களாக காலப் போக்கில் ஆகிவிட்டன.

   முஹம்மது நபியவர்களோ இந்நிலமைக்கு முற்றிலும் மாறுபட்டவர்களாக தன்னை இறைவனுடைய அந்தஸ்த்திற்கு சமனாக்க வேண்டாம் என தன் தோழர்களிடம் கண்டிப்பாக கூறி விட்டார்கள். தன்னை கண்டு யாரும் எழுந்து நிற்பதையே இவர்கள் விரும்ப வில்லை. இஸ்லாம் இவ்வளவு தெளிவாகவும் தூய்மையாகவும் இருப்பதற்கு இதுவே காரணம். 

   இன்னும் சிந்தித்து பாருங்கள்! முஸ்லிம்கள் முஹம்மது நபியின் மீது தம் உயிரையே வைத்திருக்கின்றனர். அவரின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றுகின்றனர். அவருக்கு அவதூரு சொல்லும் போதும் , அவருக்கு எதிராக கேலிச் சித்திரங்கள் வரையும் போதும் கவலையும் விசனமும் அடைகின்றனர். ஆனால் அவ்வளவு அன்பு வைத்திருந்தும் முஸ்லிம்கள் அவரின் உருவப்படத்தையோää சிலையையோ அமைக்கவில்லை. இஸ்லாம் ஓர் உண்மை இறை மார்க்கம் என்பது இதிலிருந்தும் தெளிவாகின்றது.

   நல்லுள்ளம் கொண்ட நல்லவர்களே! சுமார் 1432 வருடங்கள் ஆகியும் இந்த மகத்தான மனிதரது வார்த்தைகளும் , அவரது வாழ்க்கையும் நம்மிடம் அதே வடிவில் கிடைத்திருக்கின்றது. அன்றைய மக்களின் அநேக பிரச்சினைகளை இந்த தூய்மையான கொள்கையும் ,  வழிகாட்டலும் தீர்த்து வைத்தன. இன்றும் அது போலவே பலரது பிரச்சினைகளையும் , துன்பங்களையும் இந்த கொள்கை தீர்த்து வைக்கின்றன. ஏன்….? உங்களது பிரச்சினைகளையயும் இந்த புனிதமான ,  தூய்மையான வாழ்ககைக்கு சரியான கொள்கை தீர்த்து வைக்கும்.

   அறிவுள்ளோர்களே! நீங்கள் இன்று முதல் இந்த மகத்தான மனிதரைப் பற்றி சற்று ஆராய்ந்து தேடிப் பாருங்கள். நாம் மேலே சொன்னவைகள் யாவும் உண்மை தானா என்பதை நீங்களே நடு நிலமையோடு ஆராய்ந்து பாருங்கள். இன்று வரையிலும் நீங்கள் இவரைப் பற்றி அறியாதவராய் இருந்தால் சற்றேனும் தாமதிக்காமல் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.

   நபிகள் முஹம்மது (அவரின் மீது சாந்தி உண்டாகட்டும்) தனது கடைசி காலத்தை மதீனா நகரிலேயே கழித்தார்கள். ஆனால் தான் பிறந்த ஊரான மக்காவை எதிரிகளின் துன்புருத்தல்களால் கவலையோடு பிரிந்து வந்தவர்கள் பின்பு அவ்வூரையும் கைப்பற்றினார்கள். ஆனால் அவ்வூரில் அவருக்கு அநியாயம் இழைத்த மக்களுக்கு பொது  மன்னிப்பு வழங்கினார்கள். அவர் பலரை மன்னித்தார்.

   மனிதனாக பிறந்த அனைவரும் மரணித்தே ஆகவேண்டும். அது போலவே முஹம்மது நபியவர்களும் கடைசி ஹஜ் கடமையை நிறைவேற்றி மதீனா தேசம் திரும்பியது முதல் கொஞ்சம் கொஞ்சமாக நோய்வாய்ப் பட்டார்கள். ஒரு திங்கட் கிழமை நாளில் (ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதம் 12ஆம் நாள்) அவர்கள் மரணமடைந்தார்கள். மிக்க கண்ணியமிக்க , சர்வ வல்லமையுள்ள அந்த ஏக அல்லாஹ்விடமே அவர்கள் திரும்பி சென்றுவிட்டார்கள். அப்போது அவர்கள் 63 வயதுடையவராய் இருந்தார்கள்.

   இச்செய்தி நம்மையே கவலையில் ஆழ்த்துகின்றது. அது போல அன்றைய அவரது அருமை தோழர்களும் உணர்விழந்து மயங்கினார்கள். அன்னாரது மரணச் செய்தி கேட்டது முதல் கண்ணீர் சிந்தி கவலை கொண்டார்கள். உலகமே இருண்டு போனதாய் உணர்ந்தார்கள். அன்று முதல் கவலை மிகுதியால் வாழ்க்கையே கசந்து போனது அந்த தோழர்களுக்கு.

   முஹம்மது நபியின் மேல் தம் உயிரையே வைத்திருந்தவர்களின் அன்றைய நிலையை வார்த்தைகளினால் விளக்க முடியாது. முஹம்மது நபியவர்கள் மரணித்தார்கள். ஆனால் அவர் நமக்கு கொண்டுவந்த தூது செய்தி மரணிக்க வில்லை. அந்த தூதிற்கும் மரணமில்லை. 

   உலகத்திற்கே நலவாகவும் பெறும் நன்மையாகவும் இருக்கின்ற அந்த தூதின் நற்செய்தி “லாயிலாஹ இல்லல்லாஹ{ முஹம்மதுர் ரஸ{லுல்லாஹ்”. அதன் அர்த்தமாவது “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை  முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என்பதாகும்.

                                                        முற்றும்.

 

 
 


 
 

 

Download As PDF

No comments:

Post a Comment