-->

Monday, September 24, 2012

மின்னஞ்சலை கண்டுபிடித்தவர் தமிழரா?

த.வினோதினி (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)

இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னஞ்சலை (e-mail) கண்டுபிடித்தவர் ஒரு தமிழரா? இதுதான் இணைய உலகில் இன்று அனல் பறக்கும் சர்ச்சை

இ-மெயிலின் வரலாறு தொடர்புடைய, பல ஆவணங்களையும், program என்று சொல்லக்கூடிய செய்நிரல் அடங்கிய ஆதாரங்களையும் அருங்காட்சியகத்துக்கு, ‘இ-மெயிலைக் கண்டுபிடித்த, வி.ஏ.சிவா அய்யாத்துரை’ வழங்கினார்”, என ஸ்மித்சொனியன் என்னும் அமெரிக்க வரலாற்று தேசிய அருங்காட்சியகம் வெளியிட்ட செய்தியே, இப்பொழுது இந்த விவாதங்களுக்கு வித்திட்டிருக்கிறது.


வி.ஏ.சிவா அய்யாத்துரை தமிழகத்தில் பிறந்து, சிறு வயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர், இப்போது எம்.ஐ.டி.யில் (மாசேசூசட்ஸ் இன்ஸ்டிட்யூட்) விரிவுரையாளராக இருக்கிறார்.

1978ம் ஆண்டு, தனது 14 வயதில், வி.ஏ.சிவா அய்யாத்துரை, அலுவலகங்களுக்கிடையே காகிதத்தில் தகவல் பரிமாறிக் கொள்ளும் அஞ்சல் முறையை, இ-மெயில் (E-MAIL) என்னும் கம்ப்யூட்டர் புரோகிராம் கொண்டு மின்மயமாக்கினார். 1982ம் ஆண்டு தனது இந்த கம்ப்யூட்டர் புரோகிராமை யுனைடெட் ஸ்டேட்ஸ் காப்புரிமை அலுவலகத்தில் பதிவுசெய்திருந்தார். இந்த அலுவலகக் காகித அஞ்சல் முறை என்பது இன்பாக்ஸ், மெமோ, அவுட்பாக்ஸ், அட்ரஸ் புக் இவற்றை ஒருங்கிணைத்தது. இந்த முறையைத்தான் இப்போது நாம் அவுட்லுக், கூகுள் போன்றவற்றில் கடைப்பிடிக்கிறோம்.

ஆனால் சமீபத்தில், இது தொடர்பான பல கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. இப்பொழுது நாம் அனைவரும் பயன்படுத்தும் இணையத்தின் வேர் ஆர்ப்பாநெட் (ARPANET). அந்தத் திட்டத்தில் பணி புரிந்தவர்களே 1970,1980களில் இ-மெயிலைக் கண்டுபிடித்ததாகப் பலர் வாதிடுகிறார்கள். ஆனால், அவர்களில் சிலர், ஆர்ப்பாநெட் முறை காகித அஞ்சல் முறையைப் பிரதிபலிக்கவில்லை என ஒப்புக்கொள்கிறார்கள்.

எம்.ஐ.டி. (MIT) பல்கலைக்கழகத்தில் மொழியியல் மற்றும் தத்துவத்துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற நாம் சாம்ஸ்கி, சிவாவை ஆதரிக்கிறார். “இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் இ-மெயில், 1978ல் நீவார்க், நியூஜெர்சியில் வேலை செய்த 14 வயது இளைஞரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது மறுக்க முடியாத உண்மை” என்னும் சாம்ஸ்கி, “இ-மெயில் என்பது எந்த வகையிலும் அலுவலக அஞ்சல் முறையின் மின் வடிவமே” என்கிறார்.

1978க்கு முன்னதாகவே கணினியைப் பயன்படுத்தி, நெட் ஒர்க்குகளைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளத் துவங்கி இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இ-மெயில் என்ற மென்பொருளை முதலில் உருவாக்கியவர் சிவாதான் என்கிறார் சாம்ஸ்கி. இதற்கு ஆதாரமாக அவர் பெற்ற காப்புரிமையைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால் இவ்வாறு பல சர்ச்சைகளும் மறுப்புகளும் வரவே, ‘இ-மெயிலைக் கண்டுபிடித்தவர் வி.ஏ.சிவா அய்யாத்துரை’ என செய்தி வெளியிட்ட ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை, தன் செய்தியைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. இந்த விவாதம் இன்னும் சில காலம் நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சிவா என்ன சொல்கிறார்? தன்னுடைய கண்டுபிடிப்பு, அதற்கு முன்பு வந்தனவற்றை விட முற்றிலும் மாறுபட்டது. இ-மெயில் என்பது அலுவலகத்தினுள் அல்லது நிறுவனங்களுக்கிடையேயான காகித அஞ்சல் முறையின் (system) மின்வடிவம்,‘முறை’ என்பதை அழுத்திச் சொல்கிறார்.

1978ம் ஆண்டு கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் புரோகிராம் படிக்கச் சென்றார். புதிய தொழில்நுட்பத்தில் சிவாவிற்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது தாய் மீனாட்சி, நியூஜெர்சியில் இருந்த லெஸ்லி மைக்கெல்சனிடம் அனுப்பி வைத்தார்.சிவா, லெஸ்லி மைக்கெல்சனை தனது கண்டுபிடிப்புக்கு சாட்சியாய் அழைத்துள்ளார். மேலும் தனது கண்டுபிடிப்பின் ஆதாரங்களுக்கு ஆதரவு திரட்ட, வலைத்தளம் (www.inventorofemail.com) ஒன்றை உருவாக்கியுள்ளார்.

எதற்காக இவருடைய இத்தனை போராட்டமும்?

“இ-மெயில் தொடர்பான அனைத்து செய்திகளையும் சான்றுகளையும் பகிர்ந்து கொண்டதற்கான என்னுடைய நோக்கம் பணத்திற்காகவோ, புகழுக்காகவோ அல்ல. இ-மெயில் போன்ற மிகப் பெரிய விஷயத்தை, சரியான சூழல் அமையப் பெற்றால் உருவாக்கிட முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொண்டால், ஏதேனும் ஒரு சிறிய கண்டுபிடிப்புக்கு அது தூண்டுதலாக இருக்கும் என்பதே என் எண்ணம்” என்று தனது கருத்தில் தெளிவாக இருக்கிறார்
இந்தத் தமிழர். சிவாவின் கண்டுபிடிப்பு பற்றி விரிவாக அறிந்துகொள்ள: www.vashiva.com
Download As PDF

No comments:

Post a Comment