-->

Wednesday, December 12, 2012

அவதார்கள்

காற்று வரக்
கதவைத் திறக்கச் சொல்லி
சந்தோஷம் வர
மனதைத் திறக்கச் சொன்னவன்
மூடிய அறைக்குள்
மஞ்சத்தில் கிடந்தான்
நடிகையுடன்
வீட்டை விட்டு வந்து
வெள்ளையுடுத்தி சந்நியாசியானவன்
போதையூட்டப் பட்டு
உருண்டு புரண்டு அரற்றினான்
அம்மா பகவானேயென்று
வாயோடு வாய் வைத்து
மென்று தின்ற வாழைப்பழம்
பிரசாதமாக ஊட்டப்பட்டது
பிள்ளைவரம் கிடைக்குமாம்
கையில் கொடுத்த கூழாங்கல்
சில பல தந்திரங்களுக்குப் பின்
கற்கண்டாய் மாறிப் போனது
வாழ்க்கை இனிக்குமாம்
ஆசிர்வதிக்கப் பட்ட
மகான் என்பதால்
நாவால் நக்கி நக்கியே
குணமாகி விடுதாம்
நாள்பட்ட வியாதியும் புண்ணும்
செலவில்லாத
சிக்கன வைத்தியம்
வசதியானவனுக்கு ஆன்மீக குரு
வக்கத்தவனுக்கு
வாழவைக்கும் தெய்வம்
மாட்டியது கொஞ்சம் சாமி
என்று மாட்டப் போகுதோ
மீதி சாமி
வணங்கி நிற்க அப்பாவிகளும்
வளர்த்து விட மீடியாக்களும்
இருக்கும் வரை
கிளம்பிக் கொண்டுதானிருப்பார்கள்
புதுப் புது சாமியார்கள்
புதுப் புது அவதாரங்களில்
Download As PDF

No comments:

Post a Comment