‘கங்கை ஆறு புற்றுநோய் உருவாக்கும்
ஆட்கொல்லியாக மாறியிருக்கிறது’ என்று ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
பீகார், உத்தர பிரதேசம், மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் கங்கை
நதிக்கரையில் வசிப்பவர்கள் மற்ற பகுதியில் வசிப்பவர்களை விட புற்றுநோய்
தொற்றுவதற்கான அபாயத்தில் உள்ளார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் தேசிய புற்றுநோய்
பதிவு இயக்கத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ‘பித்தப்பை புற்றுநோயில்
கங்கை வடிகால் பகுதிகள் உலகிலேயே இரண்டாவது இடத்திலும், விந்துப்பை
புற்றுநோயில் நாட்டிலேயே முதல் இடத்திலும் உள்ளன’ என்று தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் வாரணாசி, வைஷாலி மற்றும் கிராமப் புற பாட்னா, மேற்கு
வங்காளத்தின் 24-பர்கானா மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் சர்வேயில் பங்கெடுத்த 1 லட்சம் பேரில் 20-25 பேர்
புற்றுநோயாளிகளாக இருப்பது வந்துள்ளது.
கங்கை ஆற்றினுள் விடப்படும் தொழிற்சாலைக் கழிவுகளில் ஆர்சனிக்,
புளோரைடு, குளோரைடு மற்றும் கன உலோகங்கள் கலந்திருக்கின்றன. ஆர்சனிக்
தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதில்லை. தண்ணீரில் இருக்கும் இரும்பும்
ஆக்சிஜனும் சேர்ந்து இரும்பு ஆக்சைடு உருவாகி அதனுடன் ஆர்சனிக் இணைகிறது.
இந்த விஷக் கலவை ஆற்றுப்படுகையில் தங்குகிறது. காட்மியம், ஈயம் போன்ற கன
உலோகங்களும் தண்ணீரில் தாழ்ந்து படுகையில் தங்குகின்றன.
இந்த சேர்மங்கள் நிலத்தடி நீருக்குள் ஊறிச் செல்கின்றன. அந்த நிலத்தடி
தண்ணீரைக் குடிக்கும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றின்
விளைவுகள் 2 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளுக்குள் வெளிப்படுகின்றன.
கங்கையில் குளிப்பவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்
அதிகமாகின்றன.
கங்கை ஆறு பாயும் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே புற்றுநோய் பற்றிய
ஆய்வுகள் செய்து கங்கைக்கும் அதற்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்வது
சாத்தியமாகியிருக்கிறது. ஆனால், ‘கங்கையில் குளித்தால் பாவங்கள் எல்லாம்
கரைந்து போகும்’ என்று இந்தியா முழுவதிலிருந்தும் வந்து குளித்து விட்டு
போகும் அப்பாவி மக்களில் எத்தனை பேர் அந்த காரணத்தால் புற்றுநோயால்
பீடிக்கப்படுகிறார்கள் என்பதை கணக்கெடுப்பது மிகவும் சிரமமான வேலையாக
இருக்கும். நாடு முழுவதும் சர்வே நடத்தி கங்கை பயணத்திற்கு பிறகு
புற்றுநோய் வந்தவர்களின் விபரங்களை சேகரிக்க வேண்டியிருக்கும்.
‘கங்கை நமது தாய், இந்துக்களின் புனித நதி, கங்கையின் புனிதத்தை காக்க
வேண்டும்’ என்ற இந்து ஞான மரபின் உள்ளொளியில் எழுந்த உணர்வுகள் எதுவும் பல
கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் இந்த ஆற்றை பாதுகாக்க முடியவில்லை. தமது லாப
வேட்டையில் கண்மூடித்தனமாக கழிவுகளை ஆற்றில் கொட்டும் முதலாளிகளிடம் இந்து
ஞானமரபு தோற்றுப் போயிருக்கிறது.
ஏகாத்மதா யாத்திரை என்ற பெயரில் கங்கை நீரை வைத்து விசுவ ஹிந்து பரிஷத்
முன்னர் நாடு முழுவுதும் மதவெறி யாத்திரையை நடத்தியிருக்கிறது. எத்தனை
நாளானாலும் கங்கை நீர் கெட்டுப் போகாது என்றெல்லாம் புளுகியிருக்கிறார்கள்.
இன்று கங்கை நீரை கெடுத்தது பா.ஜ.க செல்வாக்கில் இருக்கும் உ.பி மாநில
முதலாளிகள்தான். இனி கங்கையில் குளித்தால் பாவம் போகுமோ இல்லையோ புற்று
நோய் நிச்சயம் என்றான பிறகு கங்கா ‘ஜலத்தை’ புண்ணிய தீர்த்தமாக படம்
காட்டிவந்த இந்து ஞான மரபு ரசிகர்கள் என்ன செய்வார்கள்?
Download As PDF
No comments:
Post a Comment