-->

Wednesday, November 21, 2012

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை தரக்குறைவாக நினைப்பவரைப் பற்றி முன்னெச்சரிக்கை

ஒரு முறை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு போரில் கிடைத்த “கனீமத்” என்ற வெற்றிப் பொருட்களைப் பங்கீடு செய்து கொண்டிருக்கும் போது பனூதமீம் என்ற கிளையைச் சார்ந்த துல்- குவைஸிரா என்ற ஒரு மனிதன் “நபியே நீங்கள் நீதமாகப் பங்கீடு செய்யுங்கள்” என்று கூறினான். இதைக் கேட்ட கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கடும் சினத்துடன் “நீ நாசமாகுவாயாக, நான் நீதமாக நடக்காவிடில் வேறு யார்தான் நீதமாக நடந்து விடப்போகிறார்கள். நான் நேர்மையாக நடக்காவிட்டால் நீ பெறும் கைசேதம் அடைந்திருப்பாய்...” என்று கூறினார்கள்.

இதைக் கண்ணுற்றுக் கொண்டிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “நாயகமே எனக்கு அனுமதி வழங்குங்கள். அவனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்...” என்று கோரினார்கள்.

அப்போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “அவனை விட்டு விடுங்கள். ஏனென்றால் அவனுக்கு சில சகாக்கள் வர இருக்கிறார்கள். அவர்கள் தொழும் தொழுகையையும், அவர்கள் நோற்கும் நோன்பையும் உங்கள் தொழுகை, மற்றும் நோன்புடன் ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால் உங்கள் தொழுகை நோன்பை எல்லாம் மிக அற்பமாகக் கருதுவீர்கள். (அந்தளவுக்கு அவர்களின் தொழுகையும்,நோன்பும் அமைந்திருக்கும்) குர்ஆன் ஓதுவார்கள். (ஆனால்) அது அவர்களின் தொண்டையைத் தாண்டி செல்லாது. வேட்டைப் பிராணியில் இருந்து குறி தவறிப் பாய்ந்து செல்லும் அம்பைப்போல அவர்கள் மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள்...” என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் என்பதாக அபூயஸீத் அல்குத்ரி அல்குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

* ஸஹிஹ் அல் புகாரி - 3610 கிதாபுல் மனாகிப் பாபு அழாமத்தின் நுபுவ்வத்தி,
* ஸஹிஹ் அல் முஸ்லிம் - 1064 கிதாபுஸ்ஸக்காத்தி பாபு இஃதாயில் முஅல்லபத்தி
* முஸ்னத் அஹ்மத் பாகம்-3 பக்கம் 56
* இப்னுமாஜா - 172 - பாபுன் பீ திக்ரில் கவாரிஜி
* மிஷ்காத் - 5894, பாபுன் பில் முஃஜிஸாத்தி


​ எனது அன்புச் சகோதரர்களே! இப்போது கூறப்பட்ட இந்த ஹதீஸின் வெளிச்சத்தில் நமது சிந்தனையைச் செலுத்தினால் துல் குவைஸிராவின் வாரிசுகள் இந்த புவியெங்கும் பரவி கிடப்பதை நம்மால் காணமுடிகிறது. வணக்கவழிபாடு என்று எடுத்துக் கொண்டால் மேற்படி ஹதீஸில் வந்திருப்பது போல எந்நேரமும் தொழுகையும் கையுமாக இருந்து வருகிறார்கள். ஆனால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மகத்துவம் என்று எடுத்துக்கொண்டால் அந்த விஷயத்தில் புலி எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற முதுமொழிக்கேற்ப தங்களின் தலைவனாகிய துல்குவைஸிராவை பன்மடங்கு மிஞ்சிவிட்டார்கள். ஏனெனில் நீதத்தின் பிறப்பிடமாகவும் நேர்மையின் விளைநிலமாகவும் திகழ்கின்ற கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் நீதத்தைப் பற்றி மாத்திரம் அன்றைய துல்குவைஸிரா கேலி செய்தான். ஆனால் இன்றைய துல்குவைஸிராக்களோ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் நுபுவ்வத்தையே கேலிப் பொருளாக ஆக்கிக் கொண்டார்கள். அதாவது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ஒரு சராசரி மனிதராகச் சித்தரித்துக் காட்டுகிறார்கள். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “நம்மைப்போன்ற சாதாரண மனிதராக இருக்கின்றார்கள். ஆகவே அவர்களுக்கு என்று தனிப்பட்ட மரியாதையோ கௌரவமோ இல்லை. அதனால் அவர்களுக்கென்று மீலாது விழா எடுக்க வேண்டியதில்லை. அவர்களைப் புகழ்ந்து மௌலிது ஓத வேண்டியதில்லை” என்று நாவு கூசாமல் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட கூட்டத்தாரை விட்டும் எல்லாம் வல்ல நாயன் நாம் யாவரையும் காத்தருள் புரிவானாக ஆமீன்!
Download As PDF

No comments:

Post a Comment