-->

Wednesday, October 3, 2012

பொய்யான ‘சத்யம்’ - தினமணி தலையங்கம்

ஒரு கொலையாளிக்கு ஆயுள் தண்டனை நிச்சயம்; சில நேரங்களில் தூக்கு தண்டனையும் விதிக்கப்படும். ஆனால் பல ஆயிரம் குடும்பங்களை நெரிக்கும் பணமோசடிகளுக்கு தண்டனைகள் சில ஆண்டுகள் மட்டுமே.

1992-ல் ஹர்ஷத் மேத்தா பங்கு வர்த்தகத்தில் செய்த மோசடி ரூ. 4000 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் டிசம்பர் 31, 2001-ம் ஆண்டு அவர் இறக்கும்வரை வழக்கு முடியவில்லை. ""அவர் வாழ்க்கை முழுவதும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது'' என செபி விதித்தத் தடை ஒன்றைத் தவிர வேறு தண்டனைகள் ஏதும் இல்லை.

தற்போது சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் ரூ. 7000 கோடி மோசடி வெளியாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 13,500 கோடி நஷ்டம் எனப்படுகிறது. இந்த வழக்கும் சந்தேகம் இல்லாமல், ஹர்ஷத் மேத்தா வழக்கைப் போலவே, இழுத்தடிக்கப்படும். பின்னர் எல்லாராலும் மறக்கப்படும். தண்டனை வழங்கப்பட்டாலும்கூட, நிதி முறைகேடு, விதிமுறை மீறல், பொய்க்கணக்கு ஆகியவற்றுக்கு கடுமையான தண்டனைகள் கிடையாது.

இந்த மோசடி தணிக்கை நிறுவனத்தின் உதவியில்லாமல் நடந்திருக்கவே முடியாது என்பதே அனைவரின் கருத்தும். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன தணிக்கை நிறுவனமாகிய பிரைஸ்வாட்டர்ஸ்கூப்பர்ஸ், ஏற்கெனவே குளோபல் டிரஸ்ட் வங்கியின் மோசடிக் கணக்கை தணிக்கை பார்த்த குற்றத்துக்கு ஆளான நிறுவனம். இதற்காக இந்த நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி விதித்த தண்டனை: ""இனிமேல் வங்கி தொடர்பான கணக்குகளை தணிக்கை செய்யக்கூடாது'' என்பது மட்டுமே!

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜு கூறுவதைப்போல கணக்குகள் ஊதிப் பெரிதுபடுத்தப்பட்டதா அல்லது நிறுவனத்திலிருந்து பணம் "உறிஞ்சி' எடுக்கப்பட்டு, வேறு இடங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறதா என்ற ஐயப்பாடுகளும் உள்ளன. எல்லாமும் தணிக்கை நிறுவனத்துக்குத் தெரியாமல் நடந்திருக்க இயலாது.

உலகமயமாதல் காரணமாக பன்னாட்டு வங்கிகளும், பன்னாட்டு தணிக்கை நிறுவனங்களும் வந்து புகுந்ததன் விளைவுதான் இவை யாவும்.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மோசடிகள் குறித்து உலக வங்கிக்கு தெரியவந்து, சில ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இப்போது சொல்லப்படுகிறது. இத்தகைய மோசடி நிறுவனம் பற்றி இந்திய அரசுக்கு உலக வங்கி தெரிவித்திருக்காமல் மறைத்திருக்கும் என்பதை நம்ப முடியவில்லை.

அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்றதும் அயல்பணி ஒப்பந்தங்களில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என்றும், இந்தியாவில் மென்பொருள் ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என்றும் அச்சம் நிலவுகிறது. இப்போது சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன மோசடியால் ஏற்பட்டுள்ள பின்னடைவும் சேர்ந்து கொண்டால்... நிலைமை படுமோசமாகத்தான் இருக்கும்.

ஒரு சாதாரண இந்தியர், வருமானக் கணக்கைக் காட்டும்போது, வருமான வரிக் கழிவுக்காக செய்யப்பட்ட நிதி முதலீடுகளின் மூலச்சான்றுகள் மற்றும் ஒளிநகல்களை காட்டித்தான் தணிக்கைக்கு ஒப்படைக்க வேண்டியிருக்கிறது.

வங்கியில் குறைந்தபட்சம் ரூ. 50,000 நிரந்தர வைப்பு நிதி வைத்திருந்தாலும் ஆண்டுதோறும் படிவம் 15 தராவிட்டால், வங்கியே வரிப்பிடித்தம் செய்து விடுகிறது.

ஆனால் பெரிய நிறுவனம், பெரிய தணிக்கை நிறுவன உதவியுடன் கோடிக்கணக்கில் பணம் இருப்பில் உள்ளதாக கணக்கு காட்டி, கோடிக்கணக்கில் மோசடியும் வரி ஏய்ப்பும் செய்தால் அதை அரசு சரிபார்ப்பதில்லை. மோசடி அம்பலமானதும் விசாரணை நடத்துவார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே கண்காணித்து அம்பலப்படுத்த மாட்டார்கள். மோசடியில் வங்கிகள் நஷ்டமடைந்தால், அதை வாராக்கடன் பட்டியலில் தள்ளிவிடுவார்கள். பங்குகள் வாங்கி நஷ்டப்பட்டு நிற்கும் குடிமகனுக்கு நஷ்டஈடு கொடுக்க "செபி' முன்வராது.

மூதறிஞர் ராஜாஜி சொல்வார்: பூட்டு என்பது ஒழுக்கமான மனிதனுக்காகத்தான்; திருடனுக்காக அல்ல ( Locker is for gentleman, not for thief). ஏனென்றால், திருடுகிறவன் எத்தனைப் பெரிய பூட்டாக இருந்தாலும் உடைத்துத் திருடப் போகிறான். ஏதோ ஒரு மனத்தடுமாற்றத்தில் திருட நினைக்கும் நல்லவனைத் தடுக்கத்தான் பூட்டு உதவும்.

அரசின் ஆயிரம் விதிமுறைகளும் சட்டங்களும் கெடுபிடிகளும் நியாயமான குடிமகன்களுக்கு மட்டும்தான் போலும்.
( நன்றி: தினமணி )
Download As PDF

No comments:

Post a Comment