வீழ்த்தியவர்கள் வீழ்கின்றார்கள்!. விரைந்து விழிக்குமா முஸ்லிம் உலகம்?
கடந்த சில நாட்களாக ஊடகத்தில் அடிபடும் செய்திகள்
பெரும்பாலும் அமெரிக்காவை பற்றியதாகவே உள்ளது. காரணம், அந்நாட்டின்
பொருளாதாரம் அகலபாதாலத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டு உள்ளது. அதேசமயம்,
கடந்த 2001 வருடமும் இதே அமெரிக்கா, ஊடகத்தில் பெரும்பாலும் முன்னிலை
படுத்தப்பட்டது. காரணம், அந்நாட்டின் ரெட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டதின்
எதிரொலி!!. சரி, இந்த இரண்டிற்கும் தற்போது என்ன வந்தது என்று நீங்கள்
நினைக்கலாம்!. நிச்சயம் தொடர்பு உள்ளது.
அந்நாட்டின் ரெட்டைகோபுரத்தை முஸ்லிம்கள்தான் தாக்கினார்கள்
என்று முஸ்லிம் நாடுகளை பந்தாடியது அமெரிக்கா. இதில் நேரடியாக யுத்தம்
மூலம் பாதிக்கப்பட்டது ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தான். மறைமுகமாக
பாதித்துக்கொண்டிருக்கும் நாடுகள் பிலிப்பைன்ஸ் (முஸ்லிம்கள்) மற்றும்
பாகிஸ்தான். ஆனால் தன் நாட்டிற்கும் ஏதாவது வந்திடுமோ என்று பயந்தே சரணம்
சரணம் கச்சாமி பாடிக்கொண்டிருப்பது பல இஸ்லாமிய நாடுகள்!.
ஒரு கட்டிடத்தை இழந்ததற்கு கோபம்கொண்ட நாடு, இன்று தன்
நாட்டின் பொருளாதாரத்தையே ஒட்டுமொத்தமாக இழக்கும் சூழ்நிலைக்கு
ஆளாகியுள்ளது. ஒசாமா பின்லேடனை ஒழித்துக்கட்ட அமெரிக்கா செலவிட்ட தொகையோ பல
பில்லியன் டாலர்களை எட்டியது. இத்தனை பில்லியன் செலவிட்டு ஒருவரை அழிக்க
நினைத்த அமெரிக்கா, அதில் நூற்றில் ஒரு பங்கை மட்டுமே செலவிட்டு,
இடிக்கப்பட்ட அந்த கோபுரத்தை மீண்டும் அதைவிட பிரமாண்டமாக கட்டி
இருக்கலாம்!. அவ்வாறு செய்யாமல், அந்த இடத்திற்கு கிரவுண்ட் ஜீரோ என்று
பெயர் வைத்துவிட்டு, தங்களை ஹீரோவாக இந்த உலகிற்கு காட்ட நினைத்து,
இறுதியில் அவர்கள் ஜீரோவாகவே ஆகிவிட்டார்கள்.
ஆனால் பில்லியனில் முடியாத அவர்களின் நோக்கம், இறுதியில்
ஐந்து டாலர் மதிப்பிலான ஒரே ஒரு துப்பாக்கி குண்டிற்கு ஒசாமா
பலியாகியதாகவும், அவரின் உடலை கடலோடு வீசி எரிந்ததாகவும் கூறி, சினிமா
கிளைமாக்ஸில் காட்டுவது போல தன் (படத்தை) யுத்தத்தை முடித்துவிடலாம் என்று
நினைத்தது அமெரிக்கா!. ஆனால் இங்கேதான் பார்ட் டூ ஆரம்பமாகியுள்ளது!. ஆம்,
எல்லாம் வல்ல அல்லாஹ் நிச்சயம் பொறுமையாளர்களுடன் உள்ளான் என்பதற்கு மிக
சரியான உதாரணமாக இன்று அமெரிக்காவின் அழிவு திகழ்கிறது!. நீ ஆடும்வரை ஆடு!.
இறுதி ஆட்டம் என்னுடையது என்று தன் வலிமையை காட்ட ஆரம்பித்துள்ளான்
அல்லாஹ்!. இது ஒன்றும் சர்வ சாதாரணமாக நடந்தது கிடையாது!.
முஸ்லிம்களும், அவர்களின் நாடுகளும் தாக்கப்பட்ட பின்,
ரமலானிலும், தொழுகையிலும் உலக முஸ்லிம்கள் அனைவரும் இறைவனிடம், யா அல்லாஹ்
இந்த அரக்கனின் முன் நாங்கள் சக்தியற்றவர்களாக உள்ளோம்!. நீயே எங்களை இதில்
இருந்து காக்க வேண்டும் என்று கேட்ட துவாவின் பலனாக, இறைவனின் புரத்தில்
இருந்து தற்போது ஆணவத்தின் அமெரிக்காவிற்கு தொடர் அழிவுகள் வர
ஆரம்பித்துள்ளன. இந்த வருடத்தில் மட்டும், நியூயார்க் நகரமே கண்டிராத
வகையில் புயலும், பூகம்பமும் ஆட்டிப்படைத்தது. மேலும் சில வருடங்களுக்கு
முன் ஏற்பட்ட உலக பொருளாதாரத்தின் அழிவே லேஹ்மேன் எனும் அமெரிக்க
கம்பெனியில் இருந்துதான் ஆரம்பமாகியதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
ஒருநாடு அந்த நாட்டின் கரன்சியை அச்சடித்து வெளியிட வேண்டும்
என்றால், அதற்கு இணையான தங்கத்தை தன் கருவூலத்தில் வைத்துவிட்டே அந்த
கரன்சியை வெளியிட வேண்டும். இது அணைத்து நாட்டிற்கும் பொருந்தும். ஏனெனில்
இனி அந்த கரன்சி எனக்கு வேண்டாம் என்று, யாராவது ஒருவர் அந்த நாட்டின்
ரிசர்வ் வங்கியில் கொடுத்தால், அந்த பணத்திற்கு ஈடான தங்கத்தை அவருக்கு
திருப்பி கொடுக்கவேண்டும்!. தங்கத்தை பணத்தை போல பரிமாற்றம் செய்து
கொள்ளமுடியாது என்பதற்கு மாற்று வழிமுறைதான் இந்த ஏற்பாடு. ஆனால் அமெரிக்கா
வெளியிடும் டாலருக்கு இணையான அளவிற்கு, தங்கத்தை இருப்பு வைக்காமல் வெறும்
காகிதத்தை மட்டுமே பிரிண்டிங் பிரஸ்ஸில் அச்சடித்து வெளியிடுவது போல
வெளியிடுவதாக ஒரு புகாரும் உண்டு!.
ஆனால் முதலாளித்துவ பொருளாதாரத்தை (வட்டியை) முன்னிறுத்திய
அமெரிக்கா, இன்று அதே பொருளாதாரத்தின் கோட்பாட்டில் வீழ ஆரம்பித்துள்ளது.
முதலாளித்துவ பொருளாதாரம் நொறுங்கியது என்று தொலைகாட்சிகள் ஓலமிட
ஆரம்பித்துள்ளது!. தற்போது கூட ஐ.நா சபையில் உரை நிழத்திய இந்திய நாட்டின்
பிரதமரும், பொருளாதார மேதாவி(?)யும், குலோபலிசம் தற்போது தோற்றுவிட்டது
என்று கூறி காலம் கடந்த ஞானம் பெற்றுள்ளார்!. முன்பு சோசலிசமும், அதன்
பொருளாதாரமும் ரஷ்யா, சைனா மற்றும் இன்னபிற நாடுகளில் தோல்வியை கண்டது.
தற்போது கிரீஸ், போலந்து என பல நாடுகள் பொருளாதார சீரழிவு எனும் அரக்கனிடம்
சிக்கி தவிக்கின்றது.
ஆக தற்போது எஞ்சியுள்ளது இஸ்லாம் காட்டியுள்ள பொருளாதாரம்
மட்டுமே ஆகும். வட்டியில்லா கூட்டு தொழில்முறை தத்துவமே இனி இந்த உலகை
வழிநடத்த முடியும். மலேசியாவில் உட்பட எண்ணற்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி
முறை நல்லமுறையில் செயல்பட்டு கொண்டுள்ளது. உலக பொருளாதார மந்தத்தின்
பாதிப்பு கூட இந்த நாடுகளில் காணமுடியவில்லை!.
முன்பு உலக முஸ்லிம்களின் தலைமை மற்றும் கட்டுப்பாடுகள் ஒரே
நாட்டின் கீழ் இருந்து வந்தது. ஆனால் இன்று 57 இஸ்லாமிய நாடுகள் உள்ளது.
ஆகா, முன்பு நாம் ஒன்றிரண்டு நாடுகளாக தான் நாம் இருந்தோம்!. தற்போது
பரவாயில்லையே!!. 57 நாடுகளாக அசூர வளர்ச்சியடைந்து விட்டோமே, என்று
ஆச்சரியப்படாதீர்கள்!. அதற்கு மாற்றமாக நாம் கவலையே கொள்ளவேண்டும்!.
ஏனெனில் இஸ்லாமியர்களின் ஒற்றுமையை சிதைக்கவே, இதுபோன்று பல இஸ்லாமிய
நாடுகளை மேலாதிக்கம் கொண்ட நாடுகளின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டதே இந்த
எண்ணிக்கையாகும்!.
ஒன்றிரண்டு முஸ்லிம் நாடுகளாக மட்டுமே நாம் இருந்தால், எந்த
பிரச்சனையையும் விவாதித்து அவர்கள் ஒரு முடிவுக்கு உடனடியாக வரமுடியும்.
ஆனால் இவ்வாறு சிதைத்து சின்னா பின்னமாக மாற்றினால் அவர்களுக்குள்ளே
அடித்து கொள்வார்கள் என்ற விளைவே இது!.
இஸ்லாமிய பொருளாதாரம் என்பது வலிமை மிக்கது. ஒரு சில
நாடுகளில் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக (சில சமயம்) பாதிப்பு ஏற்பட்டாலும்
கூட, அது முதலாளித்துவ, சோசலிச பொருளாதாரம் போன்று, ஒரு நாட்டில் பாதிப்பு
ஏற்பட்டால் மற்ற நாடுகளுக்கும் பரவுவதை போல இது பரவாது!. மாறாக அது
பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அதன் வீரியம் சில காலம் இருக்கலாம். ஆனால்,
அதை மிக எளிமையாக கையாண்டு உடனுக்குடன் சீர்திருத்தம் செய்து மீட்டெடுக்க
முடியும்!.
இஸ்லாமிய பொருளாதார கொள்கையை தன்னகத்தே கொண்ட பல அரபுநாடுகள்
தற்போது இதை உலக மயமாக்க வேண்டும். நம்மை பொருளாதாரத்தாலும், ஆயுதத்தாலும்
வீழ்த்திய அமெரிக்கா, இன்று வீழ்ந்து கொண்டிருகின்றது. எனவே இதை தக்க
தருணமாக பயன்படுத்தி இஸ்லாமிய நாடுகள் விழித்துக்கொண்டு வீறுநடை
போடவேண்டும்!. அல்லாஹ் ஒருசில நேரங்களில் நமக்கு இதுபோல வழியை ஏற்படுத்தி
தருவான். அதை தவறவிட்டோமேயானால், நம்மை வீழ்த்தியவர்களை, இறைவன் உதவியுடன்
நாம் வீழ்த்த, இதுபோல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே!.
- அதிரை முஜீப்
No comments:
Post a Comment